செவ்வாய், 18 மே, 2021

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்த்துக்கொண்டிருக்கிறது.. நம் கடந்தகாலம், நிகழ்காலம், இனிவரும் எதிர்காலத்தையும்.. அது யாருக்காகவும் நிற்பதில்லை.. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நாம் என்ன முடிவெடுக்கிறோமோ அதுவே நாம்.. நாம் அதுவாகவே ஆகிறோம்...

ஜெயமோகனின் "குமரித்துறைவியில்" காலமின்மையை உணர்ந்த பிறகு காலம் எவருக்காகவும் நிற்காதென காட்டும் புலிநகக் கொன்றை...

மரணப்படுக்கையில் இருக்கும் பொன்னாப்பாட்டி. அவள் நினைவினூடாக அவளுடைய பரம்பரை, குடும்பம், நிலம், நீச்சு என நீள்கிறது.. இது பொன்னாப்பாட்டியின் குடும்ப வரலாறா எனில், அதுமட்டும் இல்லை. கதையினூடாக தமிழகத்தின் வரலாறும் கூடவே பின்னிப்பிணைந்திருக்கிறது...

சுமார் முதல் நூறு பக்கங்களில் தென்கலை ஐயங்கார் குடும்பத்தை வைத்து நகரும் கதை திடீரென முழுவீச்சுடன் அரசியலுக்குள் நுழைகிறது.. கட்டபொம்மன் முதல் ஊமைத்துரை, ராஜாஜி, வ.உ.சி., பாரதி, வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன், எம்.ஜி.ஆர், தி.மு.க. வரை...

பொன்னப்பட்டியின் கணவன் ராமனின் கொள்ளுத்தாத்தா கேசவ ஐயங்கார் காலத்தில் கட்டபொம்மனை தூக்கிலிடுவது போகிறபோக்கில் ஒரு செய்தியாக வருகிறது. கேசவ ஐயங்கார் மூலமாக அரசியல் குடும்பத்திற்குள் நுழைகிறது. சிறிதுகாலத்திற்குப்பின் பொன்னாப்படியின் தாத்தா சிப்பாய்கலகத்தின் துப்பாக்கிச்சூட்டில் தன உயிரை விடுகிறார்.

பொன்னாப்பாட்டியின் அடுத்த தலைமுறையில் அவரது மகன் நம்மாழ்வார் திலகரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஆயுதபுரட்சி மூலமே வெள்ளையரை விரட்டமுடியுமென உழைக்கிறார். ஆனால் ஆஷ்துரை வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்படுவது அவரது மனதை மாற்றுகிறது, நாடோடியாகி துறவியாகிறார்... அவரது மகன் மதுரகவி காங்கிரஸ் கட்சியில் தொடங்கி கம்யூனிஸ்டாக மாறி தான் நம்பிய கொள்கைக்காக உயிர் துறக்கிறான். அவரது மகன் நம்பி, கம்யூனிசத்தை நம்பி ஏற்றுக்கொண்டதனால் அவனுடைய வாழ்க்கையையும் உயிரையும் இழக்கிறான்.

குடும்பத்தில் இளவயது துர்மரணங்கள் அரசியலோடு கலந்து நடந்துகொண்டே இருக்கின்றன. ஊழ் பலவாறு குடும்பத்தை புரட்டியெடுக்கிறது.

நாவலின் காலம் மிகவும் பெரியது என்பதால் பலவிதமான தகவல்களை சுவாரஸ்யத்தோடு ஆசிரியரால் உள்ளே கொண்டு வரமுடிகிறது. ராஜாஜி, வ.உ.சி., பாரதி, வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன் போன்றோர் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். வ.வே.சு.ஐயர் நடத்தும் பள்ளியில் தனிப் பந்தி போடும் நிகழ்ச்சியும் கதையினூடாக வருகிறது. அதனை ஈவெரா எப்படி அரசியலாக்குகிறார் என்பதையும் விட்டுவைக்கவில்லை.

அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். நம்பி, கண்ணன், திருமலை போன்ற பாத்திரங்களுக்கு நடுவில் பொன்னாப்பாட்டி, உமா, ராதா, ரோசா போன்ற பலமான பெண்களும், நரசிம்மன், ஜீயர், ஜெர்மன் ஐயங்கார் போன்ற துணை கதாபாத்திரங்களும் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

எவ்வளவு கவலைகள்... ஒத்துழையாமை இயக்கம் எப்படி அவனுடைய வக்கீல் தொழிலை எப்படி குலைக்குமென்னும் பட்சியின் கவலை, மகளுக்கு மறுமணம் செய்ய முடியாமல் தவிக்கும் ராமனின் கவலை, பக்கத்துவீட்டு ஐயரை பற்றி பொன்னாவின் கவலை..

பலவிதமான நகைச்சுவைகள்... ஜெர்மன் ஐயங்காரின் சர்வாங்க சவரம், மாணவர்கள் கல்லூரியை ஆஸ்ட்விச்சுடனும், அவரை ஜின்னாவுடனும் ஒப்பிடும்போது அவரின் பதில்...

ஆசிரியரின் வாசிப்பும் பொதுஅறிவு வெளிப்படும் இடங்கள் முக்கியமாக இரண்டு. ஒன்று நாவலில் காட்டப்படும் மேற்கோள்கள். ஷேக்ஸ்பியரிலிருந்து கம்பன் வரை.. மார்க்சிய சிந்தனையாளர்கள் முதல் ரெம்ப்ராண்டின் The Anatomy Lesson of Dr. Nicolaes Tulp ஓவியம் வரை.. பல புத்தகங்களை வாசிக்கத்தூண்டும் மேற்கோள்கள்... இரண்டாவது பல நுண்தகவல்கள்.. எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டநாளில்தான் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஆட்டம் தொடங்கியது, ஆஷ்துரையை  சுட்ட வாஞ்சிநாதன் திருவிதாங்கூர் அரசில் காட்டிலாகாவில் ரேஞ்சராக பணியாற்றிக்கொண்டிருந்தார், என்பன போல... 

இன்னொரு அம்சம்.. வெவ்வேறு காலங்களில் படிக்கப்பட்ட புத்தகங்கள்... தொடக்கத்தில் "குற்றமும் தண்டனையும்", பிறகு கம்பன், பிரபந்தங்கள், ஜி.கே. செஸ்டர்டன், The Mayor of Casterbridge, கிரிக்கெட் பற்றிய புத்தகங்கள்.. இந்த வாழ்க்கை வாசிப்பதற்கே

எந்த ஒரு சித்ததாந்தமும் அடிப்படையில் வன்முறையையே போதிக்கிறது. எந்த ஒரு சித்தாந்தத்தையும் முழுமையாக நம்பக்கூடாது என்னும் கருத்து கதையின் அடிச்சரடாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. நம்மாழ்வாரும் சரி, நம்பியும் சரி, மீண்டும் மீண்டும் தங்கள் சித்தாந்தங்களை மறுபரிசீலனை செய்துகொண்டே இருக்கிறார்கள்... நம்மாழ்வார்-நம்பி உரையாடல் வாழ்க்கையின் நிதர்சங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது. கண்ணன் தொடக்கத்தில் அரசியலில் நுழைய நினைத்தாலும் தன் காதலி உமாவின், தங்கை ராதாவின் உந்துதலால் மத்திய அரசின் ஆட்சிப்பணிக்கு செல்கிறான்.

இவற்றிற்கெல்லாம் நடுவில்... புத்தகத்தின் முக்கியமான பேசுபொருள்... காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. வரலாறு யாருக்காகவும் நிற்பதில்லை.. சில சமயங்களில் நம்மை மீறி சென்றுவிடுகிறது, நம்பியின் கதை போல... சில சமயங்களில் நம்மை வெளியே வைத்து விளையாடுகிறது, நம்மாழ்வாரின் கதை போல... சில சமயங்களில் நம்மை மாற்றி சென்றுவிடுகிறது, உண்டியல் கடை குடும்பத்தை போல... அப்படி காலத்தால், வரலாற்றால் சுழற்றியடிக்கப்பட்ட குடும்பத்தின் கதையே புலிநகக் கொன்றை... 

கருத்துகள் இல்லை:

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...