புதன், 7 ஆகஸ்ட், 2019

ஆவரணா மத உணர்வுகளை பாதிக்கும் புத்தகமா?? - ஒரு வாசிப்பு அனுபவம்

நான் பள்ளிக்கூடத்தில் படித்த (!!) வரலாறாகட்டும் அல்லது இப்போது ஊடகங்கள் கூறும் வரலாறாகட்டும், நிஜத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளவை என்பதை உணர்த்திய பல புத்தகங்கள் உண்டு. அவற்றில் நான் முதலில் படித்தது மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள். ஒரு ஏழாம் வகுப்பு பள்ளி மாணவனுக்கும் (நான் அந்த புத்தகம் வெளிவந்தபோது ஏழாம் வகுப்பில் தான் இருந்தேன்) புரியும்படி எழுதியது மாபெரும் வெற்றி. பேசாமல் இதனை பள்ளி பாடநூலாக வைக்கலாம். டெல்லி சுல்தான்கள், கில்ஜிகள், லோடி பரம்பரை கடைசியாக மொகலாயர்கள் என மிகவும் சுவாரசியமான எழுத்தின் மூலம் இந்த புத்தகம் இருந்தது. ஆனால் இன்றைய விக்கிப்பீடியா யுகத்தில் இந்த புத்தகம் இளையோருக்கு எவ்வளவு பிடிக்கும் என சொல்வது கடினம்.

வளர்ந்த பிறகு வரலாற்றினை நமக்கு மீள் அறிமுகம் செய்திவைக்கும் எழுத்துக்களாக பல புனைவுகள் உள்ளன. ஜெயமோகனின் வெள்ளை யானை, இன்றைய காந்தி, ராய் மாக்ஸம் எழுதிய உப்புவேலி, முதலிய அவற்றில் சில (இந்த வாசிப்பனுபவங்களை இன்னும் எழுதவேண்டும்). இந்த வரிசையில் என்னுடைய வாசிப்பின் புதிய வாசலை திறந்தது ஆவரணா.

புத்தகத்தின் ஆசிரியரான எஸ் எல் பைரப்பாவிற்கு அறிமுகம் ஏதும் தேவை இல்லை. நான் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்தேன்.

முற்போக்குவாதியான கதையின் நாயகி ஒரு இந்துவாக பிறந்து காந்தியவாதியான தன் தந்தையின் எதிர்ப்பை மீறி மதம் மாறி திருமணம் செய்துகொள்கிறாள். அவளுடைய திருமண வாழ்வு அவள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. இருவரும் நாடக, திரைப்பட துறையில் வேலை செய்பவர்கள். அவள் கணவன் வெளியில் முற்போக்குவாதியாகவும் வீட்டில் ஒரு மதநம்பிக்கையுள்ளவனாகவும் இருக்கிறான். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் தனிக்குடித்தனம் செல்ல அவர்கள் மகன் பெரும்பாலும் தாத்தா பாட்டியிடம் வளர்கிறான்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு பிறகு கதாநாயகியின் அப்பா காலமாகிவிட, அவள் தன கிராமத்திற்கு செல்கிறாள். அங்கே அவளுடைய அப்பாவின் நூலகத்தை பார்க்கிறாள். அவர் படித்த புத்தகங்களையும் அவருடைய உழைப்பையும் பார்த்து தான் ஒன்றும் படிக்காமலே பல திரைக்கதைகளை எழுதியதை நினைத்து மனம் வெட்கி கூனி குறுகுகிறாள். அவற்றை தன் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி, அவற்றை படித்து ஒரு வரலாற்று நாவலை எழுதுகிறாள். மத உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த புதினம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு அவள் கைது செய்யப்படுவதுடன் கதையை முடிக்கிறார் எஸ் எல் பைரப்பா.


அந்த புதினத்தின் கதைக்களம் ஒளரங்கசீப் காலத்தில் நடந்த மதங்கள், மதமாற்றங்கள் பற்றியது. ராஜஸ்தானிய இந்து அரசகுடும்பத்தினர்களும், அவர்களின் அரசகுல பெண்மணிகளும் போருக்கு பிறகு எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், கப்பம் எவ்வாறு வசூலிக்கப்படுகிறது, படைகளும் அதன் தலைவர்களும் (ஆயிரத்தவர்கள், பத்தாயிரத்தவர்கள், முதலியர்) எவ்வாறு நடந்துகொள்கிறார்கள், திப்புசுல்தானின் அரசியல், என கதாநாயகியின் புதினம் விரிகிறது. காசி விஸ்வநாதர் ஆலயம் எவ்வாறு இடிக்கப்பட்டது என்பதை கதாநாயகியின் புதினத்தில் வாயிலாக, ஆசிரியர் விவரணை செயகிறார். இந்திய வரலாற்றில் மராத்தாக்கள் இல்லாமல் மொகலாயர்களிடமிருந்து ஆங்கிலேயருக்கும் பிறகு சுதந்திர இந்தியாவிற்கும் வாரணாசி வந்திருந்தால், இன்றைய வாரணாசியை நாம் கண்டிருக்க முடியாது. இந்த ஒரே ஒரு வரியை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை.

இவற்றினிடையே கதாநாயகிக்கும் பேராசிரியர் சாஸ்திரிக்குமான உறவு, அவருடைய குடும்பம், கதாநாயகியின் கணவனின் இரண்டாம் திருமணம் என பல்வேறு பாத்திரங்களின் உள்நிலையை விவரிக்கிறது இந்த புத்தகம்.

 என்னுடைய பார்வையில் மொகலாயர்களுடனான இந்து சிற்றரசர்களின் போர் விளைவுகளை வீழ்ந்தவர்களின் கோணத்தில் இந்த புத்தகம் கூறுகிறது.

இந்த புத்தகம் மத உணர்வுகளை புண்படுத்துமா என்றால், விஸ்வரூபம் கமல் பாணியில் 'ஆமாம்' மற்றும் 'இல்லை' என்பேன். நமக்கு முன்னாள் வைக்கப்படும் வரலாறு உண்மையா பொய்யா என உணர இந்த புத்தகத்தை படிக்கலாம். இந்த புரிதல் இல்லாமல் படித்தால் கண்டிப்பாக மதஉணர்வுகள் பாதிக்கப்படும்.

நான் என்னுடைய நண்பர்களிடையே இந்த புத்தகத்தில் கூறியவற்றை பேச எத்தனித்தேன். ஒரு சாரார் இந்த புத்தகம் மிகவும் சரியான தகவல்களை கொண்டிருக்கிறது என்றனர். மற்றொரு சாரார், இது சரி கிடையாது. எங்கள் மதம் குறித்து தவறான தகவல்களை தருகிறது என்கின்றனர். நான் மதுராவுக்கும் காசிக்கும் சென்றுள்ளேன். அங்கு உள்ள நிலைமையை பார்த்தால், புத்தகம் உண்மை என்பது தெளிவாக தெரியும். அதற்காக இப்போதுள்ள தலைமுறையினரை குற்றவாளிகள் என கூறுவது சற்றும் பொருந்தாது.

ஆனால் இந்த புத்தகத்தை ஒரு அரசியல் கட்சியினர் தூக்கிப்பிடித்து மற்றவரை தாக்குவது முற்றிலும் தவறான நடவடிக்கை. ஜெயமோகன் அவர்கள், இந்த புத்தகம்  இலக்கியம் அல்ல என ஒருமுறை எழுதியிருந்தார்  விளக்கியுள்ளார். இது பருவம், ஒரு குடும்பம் சிதைகிறது போல இலக்கியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், பைரப்பா அவர்கள் கூறியது போல இதுவரை எந்த ஒரு விமர்சகரும் இந்த புத்தகத்தில் வரும் தகவல்களை தவறு என கூறவில்லை.

இந்த புத்தகத்தில் பிரச்சார நெடி உள்ளதா எனில் சற்று தூக்கலாகவே உள்ளது. ஆனால், அதையும் மீறி நம் வரலாற்றினை நாம் உணர இது ஒரு முக்கியமான புத்தகம். இதுவே இந்த புத்தகத்தின் வெற்றி என கூறலாம்.

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...