வியாழன், 22 ஏப்ரல், 2021

குமரித்துறைவி - வாசிப்பனுபவம்

ஒருசில கதைகளை படித்தால் அதில் நாமும் ஒரு கதாபாத்திரமாக வாழ்வதுபோல தோன்றிவிடும். என் மகளின் திருமணத்தை நடத்தும்போது (இப்போது ஐந்தாம் வகுப்புதான்) குமரித்துறைவி படித்தபோது இந்த வாசிப்பு அனுபவம்  Déjà vu ஆக இருக்குமென்பதை இப்போதே உணரமுடிகிறது. நாவல்கள் நிகர்வாழ்க்கை அனுபவத்தை அளிக்குமென்பதை மீண்டும் மிக அழுத்தமாக உணர்ந்த நாள்.. நாவலிலிருந்து வெளிவராமல் அந்த உணர்ச்சிகளின் உச்சநிலையிலேயே கடிதம் எழுதிவிடவேண்டும் என கைகள் பரபரத்தாலும், மனம் நிறைந்து வார்த்தைகள் வரவில்லை.. A Life Time Experience....

வழக்கம்போல நடு இரவில் ஆசானின் தளத்தில் பிற கடிதங்களை படித்து, அவர் பிறந்தநாளன்று அவரின் நீண்டவாழ்வுக்காக இறைவனை பிரார்த்தனை செய்துவிட்டு படுத்துவிட்டேன். இன்று காலை எட்டு மணிக்கு படிக்கத்தொடங்கி ஒரேமூச்சில் முடித்துவிட்டுதான் அலைபேசியை கீழே வைக்க முடிந்தது.. அலையலையாய் எண்ணங்களும் மனவோட்டங்களும்...

எப்போதும் நாவல்கள் ஒருவிதமான சோகத்தையே அப்பிக்கொண்டிருக்கும். மனமும் அந்த சோகத்தில் பங்குகொண்டு கலங்கிக்கொண்டிருக்கும். ஏழாம் உலகம், ஸம்ஸ்கரா, ஊமைச்செந்நாய் போன்ற நாவல்களை படித்தபோது பலமுறை நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். . ஆனால் இன்று முதல்முறையாக நாவல் வாசிக்கும்போது சந்தோஷத்தில் கண்ணீர். என்னுடைய தங்கையின் திருமணத்தின்போது நான் என் அம்மாவை வழியனுப்பும்போது அழக்கூடாது என மிரட்டிவைத்திருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக என் அப்பாவின் கண்களில் கண்ணீர்.. மகள்கள் தந்தையின் வாழ்வில் இருக்கும் இடத்தை உணர்த்திய தருணம்..

வீட்டை கட்டிப்பார்.. கல்யாணம் பண்ணிப்பார் என்னும் சொலவடை பலருக்கும் தெரிந்திருக்கும்.. இந்த "கல்யாணம் பண்ணிப்பார்" என்பது இன்றைய தினங்களின் ஒப்பந்தக்கார்களின் கைகளில் விடப்பட்ட திருமணம் கிடையாது. எல்லாவிதமான சீதனங்களையும், அனைவருக்குமான உடைகளையும், மளிகைகளையும் இன்னபிற பொருட்களையும் நாமே சென்று வாங்கிவந்து, வீட்டில் அவற்றை குழந்தைகளிடமிருந்து காப்பாற்றி அடைகாத்து ஒருமாதகாலமாவது செய்யவேண்டிய வைபவம்.

எங்களில் திருமணம் என்பது பெண்வீட்டாரின் வைபவம்.. மாப்பிளை வீட்டார் வந்து அவர்களுக்கான மிடுக்குடன் எங்களால் மரியாதை செய்விக்கப்பட்டு பெண்ணை கூட்டிச்செல்வார்கள்.. என் அப்பா, அவர் வாழ்க்கையில் மூன்று திருமணங்களை அவரே முன்னின்று நடத்தியிருக்கிறார். அவற்றில் அவருக்கு உதவியாக நான் இருந்திருக்கிறேன்.. எவ்வளவுதான் திட்டமிட்டாலும் ஏதாவது தவறும். சத்தியமான வார்த்தை...

எங்கள் திருமணங்களில் எப்போதும் சில்லறை சச்சரவுகள் உண்டு.. அதுவும் காப்பிக்காக கண்டிப்பாக நடக்கும்.. சூடாக இல்லை, சர்க்கரை சரியாக இல்லை என பலவாறான சச்சரவுகள்.. அதனை இங்கே திவானும் தளவாயும் செய்கிறார்கள்..

இதுவரை நான் எந்தவொரு கல்யாண உற்சவங்களையும் பார்த்ததில்லை.. சிறுவயதில் ஊர்திருவிழாவின்போது விளையாட்டு.. பிள்ளையாரைப்போல.. பிறகு படிப்புக்காகவும் வேலைக்காகவும் வெளியே வந்தபிறகு அவையெல்லாம் கனவாகிப்போனது. அப்பாவிற்கு அனைத்து உறவினர்களையும் அழைத்து எங்கள் ஊரிலேயே ஸ்ரீனிவாச கல்யாணம் செய்யவேண்டுமென ஆசை.. நடந்திருந்தால் கண்டிப்பாக மகாராஜாவைப்போல நான் அவருக்கு தகப்பனாகவும் அவர் ஆதிகேசவனைப்போல எனக்கு மகனாகவும் இருந்து பத்மாவதியை தன் மகளென எண்ணி ஸ்ரீனிவாசனுக்கு திருமணம் செய்து கொடுத்திருப்பார்.. கடைசிவரை நடக்கவில்லை..

திருமணத்தின் விவரணைகளின்போது சிலசமயம் உதயனாகவும், சில சமயங்களில் மஹாராஜாவாகவும் பலசமயங்களில் மகாராஜாவின் பிரஜையாகவும் என்னை உணர்ந்துகொண்டே இருந்தேன். நானும் மகாராஜாவிடமிருந்து ஆசீர்வாதம் வாங்கினேன், ஊட்டுபுறையில் உணவுண்டேன்.. இருபது கல் நடந்து மீண்டும் ஆரல்வாய்மொழி வந்து மீனாம்பிகையை வழியனுப்பினேன்.. அவள் சுந்தரேசருடன் சென்றபோது மகாராஜாவாக நானும் அழுதேன்..

எவ்வளவுக்கு தகவல்கள்.. மகளுக்காக தந்தை அனுப்பும் சீர்வரிசைகளில்.. திருமண சடங்குகளில்.. வரலாற்று மாந்தர்களில்... இவற்றை வரிசைப்படி நினைவில் நிறுத்தவே மறுவாசிப்பு செய்யவேண்டும்..

ஜெ சொன்னதுபோல இந்த குறுநாவலை தொடராக வெளியிட்டிருந்தால் மொத்த அனுபவம் சிதறியிருக்க வாய்ப்புகள் அதிகம்.. நான் என் மகளின் திருமணத்தையும், அதன்பின் ஏற்படும் வெறுமையையும் எண்ணி இப்போதிலிருந்தே கவலைப்பட தொடங்கிவிட்டேன்... பல கவலைகளுடன் இதுவும் சேர்ந்துகொள்கிறது...

இதுவரை ஆரல்வாய்மொழி சென்றதில்லை.. கண்டிப்பாக போகவேண்டும்.. இனிமேல் எப்போது மதுரை மீனாட்சியை நினைத்தாலும் மகாராஜாவும், உதயனும், கங்கம்மாவும், வெங்கப்ப நாயக்கரும், விஜயரங்கய்யரும் கண்டிப்பாக நினைவுக்கு வருவார்கள்..

 மகாராஜா அபினின் போதத்தால் காலத்தை அழித்தாரென்றால் ஜெ சொற்களின் போதத்தால் காலத்தை அழிக்கிறார். அந்த போதத்தில் ஒருதுளியை நமக்கும் அளித்து நம்மையும் காலமின்மையை உணரச்செய்திருக்கிறார்..

கருத்துகள் இல்லை:

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...