திங்கள், 23 மார்ச், 2020

ரத்தகாயம் - சிறுகதை

"செருப்பால அடிப்பேண்டா நாயே" என அப்பா உதைக்க போர்வையை வாரிச்சுருட்டி எழுந்து அமர்ந்தேன். நல்லவேளை.. அப்பா நேரில் இல்லை. ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமை மதியம் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு இனிமேல் தூங்கக்கூடாது எனும் பழைய உறுதிமொழியை மறுபடியும் மனதிற்குள் ஒட்டிக்கொண்டேன். கையில் கடிகாரம் மணி ஆறு எனச்சொன்னது. எதிரில் பார்த்தால் ராஜூ வாயின் ஓரத்தில் வழிய தூங்கிக்கொண்டிருந்தான். ரோனி இன்னும் கல்லூரியிலிருந்து வரவில்லை. ரோனி ஒரு மலையாளத்தான், விளையாட போயிருப்பான். ஹாஸ்டலிலிருந்த மலையாளத்தான்கள் எல்லாரும் பெற்றோர் துபாயிலிருந்து அனுப்பிய பணத்தை செலவுசெய்துகொண்டிருந்தார்கள். நடுநடுவே கொஞ்சம் படிப்பு.

வெளிய ஏதோ பரபரப்புடன் கூடிய கூச்சல்... கதவிலிருந்த கம்பிவலை வழியாக தெரிந்த ரமணியிடம் "என்னடா பண்ணிக்கிட்டுருக்கீங்க" என்றேன்.

"நீயே போய்ப்பாத்துக்கோ, எனக்கு பாத்தவுடன் பக்குன்னு ஆயிடிச்சு.. பயந்து திரும்பிட்டேன்"

"பரவாயில்ல சொல்லுடா, அது வரைக்கும் போகணும்ல, திரும்பவும் தூங்கலாம்ன்னு இருக்குடா"

"அங்க ஈரமாய் ஒத்தக்காலடித்தடம்டா... அதுவும் ரத்தக்கரையோட... வாட்சமேனும் பசங்களும் பாத்துக்கிட்டுருக்காங்க"

இந்தமாதிரி அமானுஷ்யமான விஷயங்களில் பயமிருந்தாலும் ஒரு ஈர்ப்பு இருக்கும். அதுவும் இப்பொழுது தனியாக இல்லையே. அங்கே ஒரு கூட்டமே இருக்கிறது... ராஜூவை உதைத்து எழுப்பி

"டேய் ஏதோ பேய் இருக்கு போல.. வாடா போய் பாக்கலாம்".

"மூடிக்கிட்டு போடா.. உனக்கு பயம், துணைக்கு நான் வரணுமா..."

உதைவாங்கிய கோவம்.

போனவாரந்தான் ஹாஸ்டலுக்கு முன் யாரோ ஒரு பொம்மைக்கு ஆணியெல்லாம் குத்தி தொங்கவிட்டிருந்தார்கள். அந்த பீதி போவதற்குள் இப்படி.

போய்ப்பார்த்தால் வாஷ்பேசின் பக்கத்திலிருந்து பாதி காய்ந்த ஒரு ஒத்தையான வலதுகாலின் தடம்... அந்த ஈரக்காலடியில் ரத்தம்.. அந்த ரத்தத்துடன் கூடிய காலடித்தடம் நாலடிக்கொருமுறை விழுந்திருந்தது. ஈரம் காயத்தொடங்கியிருந்தது. இடதுகாலடிக்கான தடமே இல்லை. காலடித்தடம் எங்கே போகிறது என பார்ப்பதற்குள் வாட்ச்மேன் மணி வாளி தண்ணீரை கொட்டி கெடுத்துவிட்டிருந்தார்.

"இந்தாளுக்கு கண்ணும் தெரியாது காதும் கேக்காது.. போனவாட்டி கம்பிகேட்டை தொறந்து யாரோ பொம்மையை கட்டியிருக்காங்க, அதுவும் கேக்கலை... " யாரோ வாட்ச்மேனை திட்டுவதும், "போனவாட்டி பொம்மையக்கட்டினப்போ நேர்மேல் ரூம்ல இருந்த ரங்கதுரைக்கு ரெண்டுநாள் காய்ச்சல், சாதாரண பொம்மைக்கே காய்ச்சல்னா இந்தவாட்டி.." என உதிரியாக என் காதில் விழுந்தன.

கொஞ்சநேரத்தில் ஹாஸ்டலே அல்லோகலப்பட்டது. பேய் பயத்தில் ஊருக்கு போகவில்லை என சொன்னவர்கள் பலரும் வீட்டிற்கு ஓடினார்கள். அப்பாவிடம் கேட்டதற்கு "பேயெல்லாம் ஒண்ணுமில்லை.. துணிதுவைக்க பணம் செலவுபண்ணிக்கிட்டு இங்க வராத, அம்மா அவ ஒண்ணுவிட்ட அண்ணா பையன் கல்யாணத்துக்கு போறா... இங்கவந்தாலும் நீதான் துவைக்கணும், இதைக்கேக்க எஸ்டீடி போட்டு பணம்வேற தண்டம் " என சொன்னார்.

ரூமுக்கு வந்ததும் ராஜூ "நானும் ஊருக்கு போகலைடா, ரெண்டுநாளும் எப்படியாவது ஒட்டிரலாம்"

ஊருக்கு ஓடிப்போன பயந்தாங்கோழிகளை கழித்துக்கட்டினால் ஒரு இருபதுபேர் மட்டுமே ஹாஸ்டலில் மிச்சம்.

"டேய் மணி ஒம்போதைரையாச்சுடா.. மெஸ் மூடிரும்டா.. அதுக்குள்ள சாப்டுட்டு வரலாம், ரமணி, சக்தி, ஸ்ரீனி எல்லாரும் போய்ட்டாங்க"

மொத்தமாக சேர்த்து இருபதுபேர் ஹாஸ்டலில் இருந்தோம். வெளியே கிளம்பவும் ஹாஸ்டலில் பொதுத்தொலைபேசி அடித்தது. அனில் அம்பானி அப்போது 501 ரூபாய்க்கு மொபைல் தராத காலம்... வீட்டிலிருந்து போன் வந்தால் ஹாஸ்டலில் வாசலில் இருக்கும் இந்த இண்டர்காம்மில் தான் பேசவேண்டும்.

"ரங்கதுரையை கூப்பிட முடியுமா" பெண்குரல். அவன் அம்மா போலிருக்கிறது.

"அவன்  இல்லையே.. அவனோட ரூம் பூட்டியிருக்கு.. "

"மதியமே கிளம்பி ஊருக்கு வரேன்னு சொன்னான்.. இன்னும் காணலை.. ஒருவேளை வராம அங்கேயே  தங்கிட்டானான்னு கேக்கத்தான் போன் பண்ணினேன், அவனப்பாத்தா சொல்லிடு.. நாளைக்கு காலைல மொத வேலையா கடைக்கு போன பண்ண சொல்லு.."

"சொல்லிடறேம்மா.."

ரங்கதுரை சிறந்த கூடைப்பந்து வீரன். அவனுடைய அப்பா ராசிபுரத்தில் கடைவைத்திருக்கிறார். கல்லூரிக்கு  சேர்ந்து இந்த மூன்று மாதங்களில் சில தடவை மட்டுமே பேசியிருந்தாலும் கலகலப்பாக பேசுவான். போனவாரம் காய்ச்சல் வந்ததிலிருந்து ரொம்பவும் அமைதியாகிவிட்டான்.

சாப்பிடும்போதும் வெறும் பேய்க்கதைகள். கூடவே சின்னவயதில் பேய் ஒட்டியதை பார்த்த அனுபவங்களும், பேய்ப்படங்களின் கதைகளும்... அசோக்கிற்கு பிறகு பேய்களைப்பற்றி நிறைய தெரிந்த குமரன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அவன் ஒய்ஜா போர்டெல்லாம் வைத்து ஏதோ செய்துகொண்டிருப்பான்...

"டேய்.. இந்த மலையாளத்தானுக பம்மிக்கிட்டு சாப்பிட வெளியே போய்ட்டானுங்க.. ஏதோ ஹோட்டல்ல தங்கறானுங்களாம், வாட்ச்மேனை தனியா கவனிச்சிருக்கானுங்க... பயந்து சாகறானுங்க.. அந்த காசை என்கிட்ட குடுத்திருந்தா நானே வழிபண்ணியிருப்பேன்"

மனதில் மெல்ல கிலி ஓடியது.. ராமசாமி இருந்தால் நான் கூட ஏதாவது படத்திற்கு சென்று பேருந்து நிலையம், ரயில் நிலையம் என அவனை இழுத்துக்கொண்டு சுற்றிவிட்டு காலையில் வந்திருப்பேன்... துரோகி.. ஊருக்கு ஓடிவிட்டான்..

"அப்ப இன்னிக்கு நம்ம மட்டுந்தான் ஹாஸ்டல்ல தங்கணுமா?? வாட்ச்மேன் கூட மெஸ்சில தங்கிடுவாண்டா"

"டேய் பயந்தாங்கோழி.. ஏன்டா பயந்து சாகற.. இன்னைக்கு நம்ம ஒய்ஜாபோர்ட் வச்சு பாக்கலாம்.. என்னால எங்க தாத்தா கூட பேசமுடியும்.. யாருக்கு பிரச்சனைன்னு பாத்தா அவரு சொல்லிட்டு போறாரு"

சாப்பிட்டுவிட்டு என் அறைக்கு திரும்பும்போது, மறுபடியும் ரங்கதுரையின் அம்மாவின் போன்..

"அவனை நான் பாக்கலை  அம்மா... வந்திடுவான்.. பயப்படாதீங்க"

"இல்லப்பா, மதியமே கிளம்பறேன்னு சொன்னான், ஒருவேளை காலேஜ் முடிஞ்சதுக்கப்புறம் சாயங்காலம் கிளம்பினாலும் ஒம்போதுமணிக்கெல்லாம் வந்திடுவான், இப்போ மணி பத்தரை.."

"பயப்படாதீங்கம்மா.. பர்ஸ்ட் இயர் அப்படீங்கறதால நாங்களும் வெளில போகக்கூடாது.. ஒருவேளை ஊருக்கு வராமல் படத்துக்கு போயிருந்தால் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவான், வந்தா போன் பண்ண சொல்றேன்.."

என் அறைக்கு திரும்பியபோது குமரன் என் அறையையே மாற்றியிருந்தான்.. அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு கும்மிருட்டாக்கி மெழுகுவர்த்தியை ஏற்றி ஏதோ மந்திர அறைபோல் வைத்திருந்தான்.
தரையில் நட்சத்திரத்தை போட்டு ஆங்கில எழுத்துக்களையும் எண்களையும் கிறுக்கிவைத்திருந்தான்.

"ஏண்டா இதுக்கெல்லாம் என் ரூம்தானா கிடைச்சது.. மொதல்லியே எனக்கு வயத்தை கலக்குது"

"அன்னிக்கே ரங்கதுரைக்கு காய்ச்சல் வந்த உடனே எங்க தாத்தா சொன்னாரு... இந்த காவு அவனுக்காக வச்சதுன்னு..., அவன்தான் கேக்கலை"

"அவங்கம்மா கொஞ்சநேரத்துக்கு முன்னாடிதாண்டா பேசினாங்க, ஊருக்கு வரேன்னுட்டு வரலையாம்.."

"அப்போ எங்க தாத்தாவோட பேசறது ரொம்பவும் அவசரம்டா.. அவராலதான் இவனுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லமுடியும்.."

உடனே கண்கலைமூடிக்கொண்டு புரியாத பாஷைகளில் ஏதோ மந்திரங்களை சொல்லத்தொடங்கினான். என்னைத்தவிர அங்கே இருந்த ரமணி, ஸ்ரீனி, பாலா, ராஜூ எல்லாருக்கும் மனதில் படபடப்பு ஓடியது முகத்தில் பயமாக தெரிந்தது.

குமரனின் கை திடீரென மெழுகுவர்த்தியின் சுடரை தொட்டு விலகியது. மற்றொரு கை பக்கத்திலிருந்த ஒருரூபாய் நாணயத்தை எடுத்தது.

குமரன் வித்தியாசமான கீச்சிடும் குரலில் "என்னடா, என்ன வேணும்" என கேட்டவுடன், ராஜூ போர்வையை இறுக்க போர்த்திக்கொண்டு "காலைல நான் உங்களை பாக்குறேன்டா, மயக்கம் போட்டுட்டீங்கன்னா ஹாஸ்பிடல் சேர்க்க நான் மட்டுமாவது இருக்கேன்" என வாக்மேனை மாட்டிக்கொண்டான்.

அந்த குரலில் சொல்லமுடியாத ஒரு அமானுஷ்யத்தன்மை இருந்தது. குமரன் இன்னும் கண்களை மூடிக்கொண்டுதான் இருந்தான். நடுநடுவே குமரன் ஏதோ சில மந்திரங்களை முனகினான். கூடவே அவன் கை ஒய்ஜா போர்டில் நகர்ந்துகொண்டிருந்தது. மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அவன் கை மெதுவாக ரங்கதுரை என்னும் ஆங்கில எழுத்துக்கள் மேல் நகர்ந்தது.

அதே குரலில், "ரங்கதுரைக்கு ரத்த காயம்.. காட்டேரி காவுவாங்க தொடங்கிவிட்டது, இப்போ அவன் ரொம்பபேர் இருக்குற ஒரு இடத்தில் இருக்கான். சுத்தி ஒரே சத்தம், கல்லால் அடிபட்டு ரத்தம் சிந்தியிருக்கான்."

நான், "எங்க தாத்தா அடிபட்டிருக்கு? நாங்க வேணும்னா அவனை பஸ் ஸ்டாண்டிலோ ரயில்வே ஸ்டேஷனிலோ தேடப்போலாமா?"

"குறுக்கில யாரும் பேசக்கூடாது. இங்கேருந்து யாரும் போகக்கூடாது, அப்புறம் இன்னைக்கு நான் திரும்ப இங்க வரவே முடியாது, அதுவுமில்லாம, அவனை எங்கேயெல்லாம் போய்த்தேடுவீங்க"

"போலீஸ்-ல சொன்னா? ரத்தக்காயம்-ன்னு வேற சொல்லறீங்க"

கிரீச்சிடும் குரலில் திடீரென ஒரு பயங்கரம் ஒலிக்கத்தொடங்கியது. "போகாதேன்னு சொல்றேன் புரியல, முட்டாப்பயலே, மூடிக்கிட்டு ஒக்காரு"

யாரோ மெதுவாக கேவும் சத்தம் கேட்டது.. மெல்லிய சிறுநீர் நாற்றம்..

தொலைபேசி திடீரென அலறி யாரும் எடுக்காததால் அடங்கியது...

"எவனாவது வெளில போனீங்க நான் உங்களை காவு வாங்கிடுவேன்.." குரலில் பயங்கரம் இன்னும் கூடியது..

நான் பம்மிக்கொண்டே சுவற்றிலிருந்த முருகனின் படத்தை பார்த்தேன். சம்மந்தமில்லாமல் ரஜினியின் தில்லுமுல்லு திரைப்படம் நினைவுக்கு வந்தது.

மின்சாரமும் போய்விட மொத்த ஹாஸ்டலும் இருட்டில் மூழ்கியது. அமைதி. மையிருட்டு. திடீரென ரோனியின் கடிகாரம் நாள் மாறியதற்கான சத்ததை எழுப்பியது.

அந்த சத்தத்தை கேட்டவுடன் "நீங்க சொல்றதை எப்படி நம்பறது" ஸ்ரீனி தைரியத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்த குரலில் கேட்டான்.

"அவங்கம்மா வேற ரெண்டுமுறை போன் பண்ணி கேட்டிருக்காங்க, இப்போ வந்தது கூட அவங்களோட போன இருக்கோன்னு சந்தேகமா இருக்கு. நீங்க எடுக்கவிடலை"

"போன்-ல அவங்ககிட்ட என்ன சொன்னாலும் நடந்ததை யாராலும் மாத்தவேமுடியாது, நடந்தது நடந்ததுதான்"

திடீரென குமரன் வேறு குரலில் பேசத்தொடங்கினான்.. ரங்கதுரையின் போலிருந்தது..

"மச்சான் டேய், கல்லுல அடிபட்டுடுச்சுடா, எனக்கு என்ன பண்ணனும்னே தெரியலடா"

மீண்டும் கிரீச்சிடும் குரலில் "எவனோ நம்பிக்கை பத்தி பேசினானே, எங்கடா அவன்"

மூத்திர நாத்தம் அதிகமாக வரத்தொடங்கியது.

திடீரென "செருப்பால அடிப்பேண்டா நாயே" என அப்பா கத்தி உதைத்தார். வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தால், குமரன் என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே ஓடினான். அப்பா பேசியமாதிரியே இருந்ததே என மனதில் எண்ணிக்கொண்டே வலித்த முதுகை தடவிக்கொண்டேன். எதிரே காலண்டரை பார்க்க அது சனிக்கிழமை என சொன்னது. மேலே முருகன் யாமிருக்க பயமேன் என்றார். ராஜூ எழுந்துவிட்டிருந்தான், அவனுடைய தலையணையில் எச்சில் ஊறிக்கிடந்தது. ஒய்ஜா அப்படியே கிடக்க அறைமுழுதும் சிறுநீர் நாற்றத்துடன் வழிந்திருந்தது. இரண்டுபேரின் லுங்கி ஈரமாகிக்கிடந்தது.

எட்டிப்பார்த்தால் ரோனியும் அவனுடைய கூட்டுக்காரனான விகாஸும் வராந்தாவில் வந்துகொண்டிருந்தார்கள். ரோனி அவனிடம் பாண்டிகள் என ஏதோ சொல்ல இருவரும் சிரித்தார்கள்.

என்னிடம் ஆங்கிலத்தில் "ரூமை என்னடா செய்துவைத்திருக்கிறீர்கள், ஒரே நாத்தம்" என கத்த, மனதில் "மவனே நேத்து மட்டும் நீ இருந்திருந்த மூச்சா மட்டுமில்லை கக்கா கூட போயிருப்ப" என நினைத்துக்கொண்டே "இருடா, சுத்தம் செய்யவேண்டும்" என சொன்னேன்.

வாஷ்பேசின் பக்கத்தில் ரங்கதுரை ஏதோ செய்துகொண்டிருந்தான். கொஞ்சம் நிம்மதி...

'டேய் உங்கம்மா நேத்து ரெண்டுமுறை போன் பண்ணினாங்க, ஏண்டா ஊருக்கு போகல, ரொம்ப பயந்துட்டாங்க"

"திடீர்ன்னு ரெண்டு ரெகார்ட் நோட்ஸை திங்கட்கிழமை காட்டணும்னு பிசிக்ஸ் புரபஸர் சொல்லிட்டாரு. நான் கடைக்கு போன்பண்ணி அப்பாகிட்ட சொல்லிட்டேன், அப்பா வீட்டுக்கு போக பன்னெண்டுமணி ஆயிடிச்சாம். அதனால அம்மா பயந்துட்டாங்க."

"அம்மாகிட்ட பேசியாச்சா"

"பேசிட்டேண்டா.. தேங்க்ஸ்டா...

"மச்சான், நேத்து உனக்கு ஏதாவது ரத்தக்காயம் இருந்ததா"

"ஆமாடா", இருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியும் போய் என் முகம் வெளிற தொடங்கியது.

"நேத்து குமரன் ஏதோ மிமிக்ரி பண்ணப்போய் சிரிச்சுகிட்டே வந்ததில் வலதுகாலில் ஆணி ஏறிடுச்சு, பொலபொலன்னு ரத்தம்... குமரன்தான் கால்கழுவ தண்ணி ஊத்தி தொடச்சிவிட்டு கட்டுப்போட்டான், ஹாஸ்பிடல் கூட்டிகிட்டுபோய் டெட்டனஸ் இன்ஜெக்ஷன் போட்டு அண்ணா வீட்டில விட்டுவந்தான்.. அவனை பாத்தியா.. தேங்க்ஸ் சொல்லணும்டா.. ".

ஆத்திரத்துடன் அவனை தேடி ஓடத்தொடங்க எனது இடதுகாலில் ஆணி ஏறியது. "முருகா" என கத்தவும் காலையில் பார்த்த சிரிப்புடன் குமரன் தோன்றினான்.

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...