செவ்வாய், 18 மே, 2021

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்த்துக்கொண்டிருக்கிறது.. நம் கடந்தகாலம், நிகழ்காலம், இனிவரும் எதிர்காலத்தையும்.. அது யாருக்காகவும் நிற்பதில்லை.. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நாம் என்ன முடிவெடுக்கிறோமோ அதுவே நாம்.. நாம் அதுவாகவே ஆகிறோம்...

ஜெயமோகனின் "குமரித்துறைவியில்" காலமின்மையை உணர்ந்த பிறகு காலம் எவருக்காகவும் நிற்காதென காட்டும் புலிநகக் கொன்றை...

மரணப்படுக்கையில் இருக்கும் பொன்னாப்பாட்டி. அவள் நினைவினூடாக அவளுடைய பரம்பரை, குடும்பம், நிலம், நீச்சு என நீள்கிறது.. இது பொன்னாப்பாட்டியின் குடும்ப வரலாறா எனில், அதுமட்டும் இல்லை. கதையினூடாக தமிழகத்தின் வரலாறும் கூடவே பின்னிப்பிணைந்திருக்கிறது...

சுமார் முதல் நூறு பக்கங்களில் தென்கலை ஐயங்கார் குடும்பத்தை வைத்து நகரும் கதை திடீரென முழுவீச்சுடன் அரசியலுக்குள் நுழைகிறது.. கட்டபொம்மன் முதல் ஊமைத்துரை, ராஜாஜி, வ.உ.சி., பாரதி, வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன், எம்.ஜி.ஆர், தி.மு.க. வரை...

பொன்னப்பட்டியின் கணவன் ராமனின் கொள்ளுத்தாத்தா கேசவ ஐயங்கார் காலத்தில் கட்டபொம்மனை தூக்கிலிடுவது போகிறபோக்கில் ஒரு செய்தியாக வருகிறது. கேசவ ஐயங்கார் மூலமாக அரசியல் குடும்பத்திற்குள் நுழைகிறது. சிறிதுகாலத்திற்குப்பின் பொன்னாப்படியின் தாத்தா சிப்பாய்கலகத்தின் துப்பாக்கிச்சூட்டில் தன உயிரை விடுகிறார்.

பொன்னாப்பாட்டியின் அடுத்த தலைமுறையில் அவரது மகன் நம்மாழ்வார் திலகரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஆயுதபுரட்சி மூலமே வெள்ளையரை விரட்டமுடியுமென உழைக்கிறார். ஆனால் ஆஷ்துரை வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்படுவது அவரது மனதை மாற்றுகிறது, நாடோடியாகி துறவியாகிறார்... அவரது மகன் மதுரகவி காங்கிரஸ் கட்சியில் தொடங்கி கம்யூனிஸ்டாக மாறி தான் நம்பிய கொள்கைக்காக உயிர் துறக்கிறான். அவரது மகன் நம்பி, கம்யூனிசத்தை நம்பி ஏற்றுக்கொண்டதனால் அவனுடைய வாழ்க்கையையும் உயிரையும் இழக்கிறான்.

குடும்பத்தில் இளவயது துர்மரணங்கள் அரசியலோடு கலந்து நடந்துகொண்டே இருக்கின்றன. ஊழ் பலவாறு குடும்பத்தை புரட்டியெடுக்கிறது.

நாவலின் காலம் மிகவும் பெரியது என்பதால் பலவிதமான தகவல்களை சுவாரஸ்யத்தோடு ஆசிரியரால் உள்ளே கொண்டு வரமுடிகிறது. ராஜாஜி, வ.உ.சி., பாரதி, வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன் போன்றோர் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். வ.வே.சு.ஐயர் நடத்தும் பள்ளியில் தனிப் பந்தி போடும் நிகழ்ச்சியும் கதையினூடாக வருகிறது. அதனை ஈவெரா எப்படி அரசியலாக்குகிறார் என்பதையும் விட்டுவைக்கவில்லை.

அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். நம்பி, கண்ணன், திருமலை போன்ற பாத்திரங்களுக்கு நடுவில் பொன்னாப்பாட்டி, உமா, ராதா, ரோசா போன்ற பலமான பெண்களும், நரசிம்மன், ஜீயர், ஜெர்மன் ஐயங்கார் போன்ற துணை கதாபாத்திரங்களும் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

எவ்வளவு கவலைகள்... ஒத்துழையாமை இயக்கம் எப்படி அவனுடைய வக்கீல் தொழிலை எப்படி குலைக்குமென்னும் பட்சியின் கவலை, மகளுக்கு மறுமணம் செய்ய முடியாமல் தவிக்கும் ராமனின் கவலை, பக்கத்துவீட்டு ஐயரை பற்றி பொன்னாவின் கவலை..

பலவிதமான நகைச்சுவைகள்... ஜெர்மன் ஐயங்காரின் சர்வாங்க சவரம், மாணவர்கள் கல்லூரியை ஆஸ்ட்விச்சுடனும், அவரை ஜின்னாவுடனும் ஒப்பிடும்போது அவரின் பதில்...

ஆசிரியரின் வாசிப்பும் பொதுஅறிவு வெளிப்படும் இடங்கள் முக்கியமாக இரண்டு. ஒன்று நாவலில் காட்டப்படும் மேற்கோள்கள். ஷேக்ஸ்பியரிலிருந்து கம்பன் வரை.. மார்க்சிய சிந்தனையாளர்கள் முதல் ரெம்ப்ராண்டின் The Anatomy Lesson of Dr. Nicolaes Tulp ஓவியம் வரை.. பல புத்தகங்களை வாசிக்கத்தூண்டும் மேற்கோள்கள்... இரண்டாவது பல நுண்தகவல்கள்.. எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டநாளில்தான் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஆட்டம் தொடங்கியது, ஆஷ்துரையை  சுட்ட வாஞ்சிநாதன் திருவிதாங்கூர் அரசில் காட்டிலாகாவில் ரேஞ்சராக பணியாற்றிக்கொண்டிருந்தார், என்பன போல... 

இன்னொரு அம்சம்.. வெவ்வேறு காலங்களில் படிக்கப்பட்ட புத்தகங்கள்... தொடக்கத்தில் "குற்றமும் தண்டனையும்", பிறகு கம்பன், பிரபந்தங்கள், ஜி.கே. செஸ்டர்டன், The Mayor of Casterbridge, கிரிக்கெட் பற்றிய புத்தகங்கள்.. இந்த வாழ்க்கை வாசிப்பதற்கே

எந்த ஒரு சித்ததாந்தமும் அடிப்படையில் வன்முறையையே போதிக்கிறது. எந்த ஒரு சித்தாந்தத்தையும் முழுமையாக நம்பக்கூடாது என்னும் கருத்து கதையின் அடிச்சரடாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. நம்மாழ்வாரும் சரி, நம்பியும் சரி, மீண்டும் மீண்டும் தங்கள் சித்தாந்தங்களை மறுபரிசீலனை செய்துகொண்டே இருக்கிறார்கள்... நம்மாழ்வார்-நம்பி உரையாடல் வாழ்க்கையின் நிதர்சங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது. கண்ணன் தொடக்கத்தில் அரசியலில் நுழைய நினைத்தாலும் தன் காதலி உமாவின், தங்கை ராதாவின் உந்துதலால் மத்திய அரசின் ஆட்சிப்பணிக்கு செல்கிறான்.

இவற்றிற்கெல்லாம் நடுவில்... புத்தகத்தின் முக்கியமான பேசுபொருள்... காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. வரலாறு யாருக்காகவும் நிற்பதில்லை.. சில சமயங்களில் நம்மை மீறி சென்றுவிடுகிறது, நம்பியின் கதை போல... சில சமயங்களில் நம்மை வெளியே வைத்து விளையாடுகிறது, நம்மாழ்வாரின் கதை போல... சில சமயங்களில் நம்மை மாற்றி சென்றுவிடுகிறது, உண்டியல் கடை குடும்பத்தை போல... அப்படி காலத்தால், வரலாற்றால் சுழற்றியடிக்கப்பட்ட குடும்பத்தின் கதையே புலிநகக் கொன்றை... 

வியாழன், 22 ஏப்ரல், 2021

குமரித்துறைவி - வாசிப்பனுபவம்

ஒருசில கதைகளை படித்தால் அதில் நாமும் ஒரு கதாபாத்திரமாக வாழ்வதுபோல தோன்றிவிடும். என் மகளின் திருமணத்தை நடத்தும்போது (இப்போது ஐந்தாம் வகுப்புதான்) குமரித்துறைவி படித்தபோது இந்த வாசிப்பு அனுபவம்  Déjà vu ஆக இருக்குமென்பதை இப்போதே உணரமுடிகிறது. நாவல்கள் நிகர்வாழ்க்கை அனுபவத்தை அளிக்குமென்பதை மீண்டும் மிக அழுத்தமாக உணர்ந்த நாள்.. நாவலிலிருந்து வெளிவராமல் அந்த உணர்ச்சிகளின் உச்சநிலையிலேயே கடிதம் எழுதிவிடவேண்டும் என கைகள் பரபரத்தாலும், மனம் நிறைந்து வார்த்தைகள் வரவில்லை.. A Life Time Experience....

வழக்கம்போல நடு இரவில் ஆசானின் தளத்தில் பிற கடிதங்களை படித்து, அவர் பிறந்தநாளன்று அவரின் நீண்டவாழ்வுக்காக இறைவனை பிரார்த்தனை செய்துவிட்டு படுத்துவிட்டேன். இன்று காலை எட்டு மணிக்கு படிக்கத்தொடங்கி ஒரேமூச்சில் முடித்துவிட்டுதான் அலைபேசியை கீழே வைக்க முடிந்தது.. அலையலையாய் எண்ணங்களும் மனவோட்டங்களும்...

எப்போதும் நாவல்கள் ஒருவிதமான சோகத்தையே அப்பிக்கொண்டிருக்கும். மனமும் அந்த சோகத்தில் பங்குகொண்டு கலங்கிக்கொண்டிருக்கும். ஏழாம் உலகம், ஸம்ஸ்கரா, ஊமைச்செந்நாய் போன்ற நாவல்களை படித்தபோது பலமுறை நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். . ஆனால் இன்று முதல்முறையாக நாவல் வாசிக்கும்போது சந்தோஷத்தில் கண்ணீர். என்னுடைய தங்கையின் திருமணத்தின்போது நான் என் அம்மாவை வழியனுப்பும்போது அழக்கூடாது என மிரட்டிவைத்திருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக என் அப்பாவின் கண்களில் கண்ணீர்.. மகள்கள் தந்தையின் வாழ்வில் இருக்கும் இடத்தை உணர்த்திய தருணம்..

வீட்டை கட்டிப்பார்.. கல்யாணம் பண்ணிப்பார் என்னும் சொலவடை பலருக்கும் தெரிந்திருக்கும்.. இந்த "கல்யாணம் பண்ணிப்பார்" என்பது இன்றைய தினங்களின் ஒப்பந்தக்கார்களின் கைகளில் விடப்பட்ட திருமணம் கிடையாது. எல்லாவிதமான சீதனங்களையும், அனைவருக்குமான உடைகளையும், மளிகைகளையும் இன்னபிற பொருட்களையும் நாமே சென்று வாங்கிவந்து, வீட்டில் அவற்றை குழந்தைகளிடமிருந்து காப்பாற்றி அடைகாத்து ஒருமாதகாலமாவது செய்யவேண்டிய வைபவம்.

எங்களில் திருமணம் என்பது பெண்வீட்டாரின் வைபவம்.. மாப்பிளை வீட்டார் வந்து அவர்களுக்கான மிடுக்குடன் எங்களால் மரியாதை செய்விக்கப்பட்டு பெண்ணை கூட்டிச்செல்வார்கள்.. என் அப்பா, அவர் வாழ்க்கையில் மூன்று திருமணங்களை அவரே முன்னின்று நடத்தியிருக்கிறார். அவற்றில் அவருக்கு உதவியாக நான் இருந்திருக்கிறேன்.. எவ்வளவுதான் திட்டமிட்டாலும் ஏதாவது தவறும். சத்தியமான வார்த்தை...

எங்கள் திருமணங்களில் எப்போதும் சில்லறை சச்சரவுகள் உண்டு.. அதுவும் காப்பிக்காக கண்டிப்பாக நடக்கும்.. சூடாக இல்லை, சர்க்கரை சரியாக இல்லை என பலவாறான சச்சரவுகள்.. அதனை இங்கே திவானும் தளவாயும் செய்கிறார்கள்..

இதுவரை நான் எந்தவொரு கல்யாண உற்சவங்களையும் பார்த்ததில்லை.. சிறுவயதில் ஊர்திருவிழாவின்போது விளையாட்டு.. பிள்ளையாரைப்போல.. பிறகு படிப்புக்காகவும் வேலைக்காகவும் வெளியே வந்தபிறகு அவையெல்லாம் கனவாகிப்போனது. அப்பாவிற்கு அனைத்து உறவினர்களையும் அழைத்து எங்கள் ஊரிலேயே ஸ்ரீனிவாச கல்யாணம் செய்யவேண்டுமென ஆசை.. நடந்திருந்தால் கண்டிப்பாக மகாராஜாவைப்போல நான் அவருக்கு தகப்பனாகவும் அவர் ஆதிகேசவனைப்போல எனக்கு மகனாகவும் இருந்து பத்மாவதியை தன் மகளென எண்ணி ஸ்ரீனிவாசனுக்கு திருமணம் செய்து கொடுத்திருப்பார்.. கடைசிவரை நடக்கவில்லை..

திருமணத்தின் விவரணைகளின்போது சிலசமயம் உதயனாகவும், சில சமயங்களில் மஹாராஜாவாகவும் பலசமயங்களில் மகாராஜாவின் பிரஜையாகவும் என்னை உணர்ந்துகொண்டே இருந்தேன். நானும் மகாராஜாவிடமிருந்து ஆசீர்வாதம் வாங்கினேன், ஊட்டுபுறையில் உணவுண்டேன்.. இருபது கல் நடந்து மீண்டும் ஆரல்வாய்மொழி வந்து மீனாம்பிகையை வழியனுப்பினேன்.. அவள் சுந்தரேசருடன் சென்றபோது மகாராஜாவாக நானும் அழுதேன்..

எவ்வளவுக்கு தகவல்கள்.. மகளுக்காக தந்தை அனுப்பும் சீர்வரிசைகளில்.. திருமண சடங்குகளில்.. வரலாற்று மாந்தர்களில்... இவற்றை வரிசைப்படி நினைவில் நிறுத்தவே மறுவாசிப்பு செய்யவேண்டும்..

ஜெ சொன்னதுபோல இந்த குறுநாவலை தொடராக வெளியிட்டிருந்தால் மொத்த அனுபவம் சிதறியிருக்க வாய்ப்புகள் அதிகம்.. நான் என் மகளின் திருமணத்தையும், அதன்பின் ஏற்படும் வெறுமையையும் எண்ணி இப்போதிலிருந்தே கவலைப்பட தொடங்கிவிட்டேன்... பல கவலைகளுடன் இதுவும் சேர்ந்துகொள்கிறது...

இதுவரை ஆரல்வாய்மொழி சென்றதில்லை.. கண்டிப்பாக போகவேண்டும்.. இனிமேல் எப்போது மதுரை மீனாட்சியை நினைத்தாலும் மகாராஜாவும், உதயனும், கங்கம்மாவும், வெங்கப்ப நாயக்கரும், விஜயரங்கய்யரும் கண்டிப்பாக நினைவுக்கு வருவார்கள்..

 மகாராஜா அபினின் போதத்தால் காலத்தை அழித்தாரென்றால் ஜெ சொற்களின் போதத்தால் காலத்தை அழிக்கிறார். அந்த போதத்தில் ஒருதுளியை நமக்கும் அளித்து நம்மையும் காலமின்மையை உணரச்செய்திருக்கிறார்..

திங்கள், 29 மார்ச், 2021

வெக்கை - வாசிப்பனுபவம்

 


 வெக்கை வாங்க

வாழ்க்கையில் இரண்டே வகையான உறவுகள்தான்.. ஓன்று, என்ன நடந்தாலும் உடன் நிற்பவை, மற்றது, சிறிய பிரச்சனையையே காரணம் காட்டி விலகுபவை. என்னுடைய கடுகுபோன்ற சிறிய வாழ்க்கையில் இரண்டையுமே நான் பார்த்திருக்கிறேன். அதே நேரத்தில் மனிதர்களும் இரண்டு வகையே.. என்ன நடந்தாலும் ஏற்றுக்கொண்டு மேலே செல்பவர்கள், எதிர்கொண்டு போராடுபவர்கள். இவ்விரண்டு வகையினரையும் அனைவரும் எதிர்கொண்டிருப்போம்.

இந்த இரண்டு வரிகளை மட்டுமே வைத்துக்கொண்டு பிரமாதமான கதையை எழுதமுடியுமா? இந்த கேள்விக்கான பதில்தான் பூமணி அவர்களின் "வெக்கை" என்னும் நாவல்.

நிலத்திற்காக அண்ணனை கொன்ற வடக்கூரானின் கையை வெட்டப்போய் அவனை கொன்றுவிடுகிறான் செலம்பரம் (சிதம்பரம்). பிறகு மொத்த குடும்பமும் ஓட த்தொடங்குகிறது. செலம்பரமும் அவன் அப்பா பரமசெவம் (பரமசிவம்) ஒரு புறமும், அவனுடைய தங்கையும் தாயும் வேறுபுறமும் வடக்கூரனின் ஆட்களிடமிருந்து தப்பி ஒளிந்து ஓடுகிறன்றனர். இந்த ஓட்டமும் ஒளிதலுமே கதை.

ஒரு பழிவாங்கும் கதையாக இருந்தாலும் முழுவதுமாக பாசத்தால், அன்பினால் கதையை கொண்டுசென்றிருக்கிறார். ஒரு தந்தை தன மகன் மீது வைக்கும் பாசத்தை இதைவிட நுணுக்கமாக கூறுவது கடினம். அம்மா, அப்பா, மாமா, தங்கை, பங்காளிகள் மற்றும் உறவுகள் இவர்களை காப்பாற்ற எடுக்கும் அபாயமான துணிச்சல் ஒன்றே உறவுகளின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கிறது. உறவுகளென்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

புத்தகம் படித்தபிறகும் அசுரன் திரைப்படத்தை பலநாட்கள் பார்க்கவில்லை. ஏனென்றால் பலசமயங்களில் திரைப்படத்தை எடுக்கும்போது கதையில் உள்ள உயிரோட்டம் தவறிவிடும். இங்கு திரைப்படத்தை கதையின் உயிரோட்டத்துடன் எடுத்த இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டியே ஆகவேண்டும். பலர் இதில் தவறவிட்ட ஒரு முக்கியமான விஷயம், இந்த திரைப்படம் வெக்கை நாவலை மட்டும் மையமாக வைத்து நகரவில்லை, கீழ்வெண்மணியில் நடந்த கொடூரத்தையும் இந்த தலைமுறைக்கு சொல்லியிருக்கிறது.

கதையில் இருந்த பாசம் திரைப்படத்தில் பழிவாங்கலாக தெரிவது எழுத்துக்கும் நிகழ்கலைக்குமான வேறுபாடேயன்றி வேறில்லை.

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...