ஞாயிறு, 30 ஜூன், 2019

ஆச்சரியம் என்னும் கிரகம் - வாசிப்பு அனுபவம்

ஆச்சரியம் என்னும் கிரகம் - நான் இதுவரை படித்ததில் சிறந்த சிறார் இலக்கியங்களில் ஒன்று.

 சாஹித்திய அகாதெமியின் பதிப்பாக வந்துள்ள இந்த தொகுப்பில் ஐந்து சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் இப்போது அதிகமாக இருக்கும் சுயநலமிக்க பேராசை, வளர்ச்சிக்கு பின்னால் ஓடுதல் மற்றும் மிகவும் மெலிந்துவரும் சகமனித உணர்வு போன்றவற்றின் பின்விளைவுகளை குழந்தைகளுக்கும் புரியுமாறு எழுதியுள்ளார் ஜப்பானிய எழுத்தாளரான ஷின்ஜி தாஜிமா.

முதல்கதையில் மனிதனாக மாறிவிட்ட கோன் என்னும் நரி, எப்படி இக்கால மனிதனின் குணமான இயந்திரத்தனத்தை கொண்டு தன் நரி இனத்தின் அழிவை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை ஆராய்கிறது. பொருளாதார வசதிக்காக வெளியூரிலும் வெளிநாடுகளிலும் வேலை செய்துகொண்டு ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பெற்றோரை பார்க்க செல்லும் இக்கால இளைஞர்களின் தவிப்பை தத்ரூபமாக காட்டுகிறார்.

இரண்டாவது கதையில் நம் மனம் எப்படி மாற்றங்களை எதிர்கொள்ளவேண்டும் என்பதை இரு செடிகள் விதைகளிருந்து வெளிவருவதை குறியீட்டாக கொண்டு விளக்குகிறார்.

மூன்றாவது, புத்தகத்தில் தலைப்பான ஆச்சரியம் என்னும் கிரகம். இந்த கதையில் மனித இனம் வளர்ச்சிக்காக இயற்கையின் வரங்களை எவ்வாறெல்லாம் சுரண்டுகின்றன, அதனால் இந்த உலகமே எவ்வாறு அழிவின் பாதையில் செல்கிறது போன்ற இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் தேவையான விஷயங்களை விவாதிக்கிறது.

நான்காவது கதை மனிதர்களுக்குள் இருக்கும் போட்டிமனப்பான்மையை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை கூறுகிறது.

கடைசி கதை இயற்கை வளங்களை அழிப்பதனால் விளையும் வறட்சியை படம் பிடிக்கிறது.

இந்த ஐந்து கதைகளும் குழந்தைகளுக்கு இந்த நூற்றாண்டில் நடந்துகொண்டிருக்கும் நுகர்வு கலாச்சாரமும், அதன் விளைவுகளான  சுயநலமும், பேராசையும், மனிதாபிமான உணர்வுகளும் அதன் நேர்மறை எதிர்மறை பாதிப்புகளும் மிக சிறந்த அறிமுகமாக அமையும். மனிதன் என்னும் மிருகம் பிற உயிரினங்களை எவ்வாறு சுரண்டுகிறது, இரக்கம், உலகியல் குறித்த தரிசனம், முதலியவை குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஒரு புதிய வாசலை திறக்கும்.

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...