திங்கள், 15 ஏப்ரல், 2019

அறம் வரிசை கதைகள் - வாசிப்பு, மீள்வாசிப்பு

பள்ளி பருவத்தில் என்னுடைய வாசிப்பு தொடங்கிய காலத்தில் ராஜேஷ்குமார்களும் பட்டுக்கோட்டை பிரபாகர்களும் அவர்களுடைய கதைகள் மூலம் என்னை பல நாட்கள் என் பெற்றோர்களிடம் திட்டும் அடியும் வாங்கி தந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் நான் உருப்படியாக பலமுறை வாசித்து மீள்வாசிப்பு செய்து கற்றுக்கொண்டது ராஜாஜியின் வியாசர் விருந்து.

கல்லூரியிலும் சரியான தேடுதலும் வழிகாட்டுதலும் இல்லாததால் சில வார இதழ்களும் துப்பறியும் கதைகளும் படித்து நேரத்தை வீணடித்தேன். பிறகு என் நண்பன் ராமசாமி மூலம் கல்கியும் சாண்டில்யனும் அறிமுகம் ஆயினர். பிறகு சுஜாதா. அப்போது எல்லாரையும் போல இலக்கியம் என்பது இவையே என கிடந்தேன். இவற்றினால் நடந்த ஒரே நன்மை, என்னுடைய வாசிப்பு வேகத்தை கூட்டியது மட்டுமே.

வேலைக்கு புனே சென்று பிறகு வாசிப்பு அறவே நின்றுபோனது. பிறகு மீண்டும் வாசிப்பை தொடங்க நான்கு  ஆண்டுகள் ஆனது. தொடங்கியபோது முற்றிலும் புதிய இடத்தில தொடங்கினேன். தொடங்கிய இடம் ஜெவின் இணையத்தளம்.

சில கதைகள் மற்றும் பதிவுகள் படித்தபின் தொடங்கியதுதான் அறம் சிறுகதைகள். முதல்முறை படிக்க நான் எடுத்துக்கொண்டது 180 நிமிடங்கள். ஆனால் அவை ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் நீங்கவில்லை.

செட்டியாரின் மனைவியும், கெத்தேல் சாஹிப்பும், வணங்கான் நாடாரும் என்னை முழுவதுமாக உள்ளிழுத்துக்கொண்டனர். கீதையின் சாராம்சமான கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதை யானை டாக்டர் தவிர யாரும் இவ்வளவு எளிதாக கூற முடியாது. இந்நாள்வரை மனம் நெகிழாமல், கண் கலங்காமல் நூறு நாற்காலிகள் கதையை நான் படித்தது கிடையாது.

எந்த ஒரு அறத்தையும் உணர்ச்சிகள் வழியாக கூறினால் அதன் நேர்மறை பாதிப்பு பல நாட்கள் இருக்கும். பாதிப்பு இருக்கும்வரை நம் மனது அதை பற்றி யோசித்து யோசித்து கருத்தை தொகுத்துக்கொள்ளும்.
எப்போதெல்லாம் மனோதைரியம் குன்றி, தன்னம்பிக்கையற்று இருந்திருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் வணங்கானையும், அதீத வெறுப்பு பெருகும் காலங்களில் நூறு நாற்காலிகளையும் படிக்க வைத்து மீள்வாசிப்பு செய்யவைத்தது. அலுவலகத்தில் ஏதோ ஒரு பெரிய காரியம் செய்து பிறர் அதை கவனிக்காமல் போனால் யானை டாக்டர் மனதில் வராமல் போனதில்லை.

இப்போது அதே கதைகளை என் எட்டு வயது  மகளுக்கு சொல்லும்போது அவைகளே முற்றிலும் வேறொரு தரிசனத்தை தந்தன. குழந்தையின் பார்வையில் அறம் என்பது சரி அல்லது தவறு என்னும் இருமைக்குள் அடங்கிவிடும். அதை மீறி பரந்த விசாலமான பார்வைக்கு அறம் சிறுகதைகள் மிகவும் தகுந்தவை. முதல்முறை செட்டியாரின் மனைவி தார்ச்சாலையில் அமர்ந்து அவளை தூக்கியபோது சேலையுடன் தோலும் கிழிந்தது என சொல்ல என்னுடைய மகள் கண் கலங்கி, அடுத்தவர்களை எப்போதும் நான் ஏமாற்றமாட்டேன் என சொன்னது என் தரிசனங்களுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

ஜெவின் கதைகளுள் அறம் சிறுகதை தொகுப்பு மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...