சனி, 20 ஏப்ரல், 2019

சிறுவயது விளையாட்டுக்கள்

பள்ளிப்பருவத்தில் எங்களுடைய விளையாட்டு என்பது ஒன்று சேர்ந்து விளையாடும் அனுபவமாவே இருந்தது. ஆண்-பெண் பேதமின்றி அனைவரும் தெருவிலேயே விளையாடுவோம். பெண்கள் ஒருபுறம் ஐந்தாங்கல், ஸ்கிப்பிங் என விளையாட, நாங்கள் மட்டைப்பந்து, கபடி, என விளையாடுவோம். சில சமயங்களில் பையன்களும் பெண்களும் சேர்ந்து கோ-கோ விளையாடுவோம். இவற்றையெல்லாம்விட குதூகலமான விளையாட்டுக்கள் இரண்டு உண்டு. அவை இரண்டும் பையன்களுக்கானவை என வரையறை செய்யப்பட்டிருந்தன.

ஒன்று ஒருவிதமான பந்து விளையாட்டு. பையன்கள் இரு அணிகளாக பிரிந்து நிற்க வேண்டும். ஏழு தட்டையான கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கவேண்டும். ஒரு அணியின் "வீரன்" பந்தால் அந்த கற்களை சரிக்க அந்த அணி பையன்கள் கற்களை ஒன்றன் மீது ஒன்றாக ஏழு கற்களையும் அடுக்கவேண்டும். மற்ற அணியின் பையன்கள் அதை தடுக்கவேண்டும். எப்படியென்றால் அந்த பந்தால் கற்களை அடுக்கும் அணி பையன்கள் மீது பந்தை வீசி துரத்தவேண்டும். வேகமாக அடி வாங்கி வாங்கி, முதுகு முழுவதும் சிகப்பான அனுபவங்கள் பலருக்கு உண்டு. நானே ஒருமுறை என் முதுகை சிவக்கவைத்த ஒருவனை பழிவாங்க கையில் பந்துடன் ஊர் முழுவதும் துரத்தியிருக்கிறேன். விளையாட்டு முடிந்தபிறகு கோவில் குளத்தில் குளித்து வீடுதிரும்புவோம். குளிக்கும்போதே அடுத்தவன் முதுகை பழுக்கவைத்ததை பெருமையாக பேசி கோபதாபவெறுப்புகளை அங்கேயே விட்டுவிட்டு அடுத்தநாள் விளையாட்டை தொடங்குவோம்.

இரண்டாவது விளையாட்டு கண்ணாமூச்சி, அதுவும் இரவின் இருட்டில். ஊர் தேர்திருவிழா கோடை விடுமுறையின்போது வரும். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து பலர் தங்களுடைய தாத்தா-பாட்டி வீட்டிற்கு வருவார்கள். அந்த நாட்களில் தினமும் கோவில் ஊர்வலமும், பிறகு பிரசாத விநியோகமும் இருக்கும். அனைத்து பையன்களும் இந்த சமயங்களில் வேட்டியிலேயே இருக்கவேண்டும். இரவு உணவுண்டபின் சுமார் ஒன்பது மணிக்கு விளையாட்டு தொடங்கும். தெருவிலுள்ள அனைத்து திண்ணைகளில் ஒளிந்துகொள்ளலாம். தேடுபவன் நூறுவரை எண்ணிவிட்டு வரும்போது அனைவரும் வேட்டியால் முகத்தை மூடிக்கொண்டு அவனை துரத்துவோம். அடையாளம் கண்டுபிடிக்காவிட்டால் மீண்டும் எண்ணவேண்டியதுதான் இது இரவு பன்னிரண்டு ஒருமணிவரை நீளும். ஒருநாள் இரவுமுழுதும் கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் அடுத்தநாள் இரவும் அழுதுகொண்டே எண்ணதொடங்கும் பலநாட்களை நாங்கள் பார்த்துள்ளோம். கிராமமென்பதால் எங்களூரில் பழைய திரைப்படமே வெளியிடப்படும். விளையாடி முடித்தபின்னர் நகரத்து பையன்கள் கூறும் புதிய திரைப்பட கதைகளை கேட்டவாறு கோவிலிலேயே படுத்து உறங்குவோம்.

இந்தமாதிரி நட்பு என்பது எதையும் எதிர்பாராமல், தங்களை விளையாட்டிற்கே கொடுத்து அடுத்தவர்களை காப்பாற்றி விளையாடுபவை. அவற்றின் மூலம் எங்கள் சுயநலத்திலிருந்து வெளியேற எங்களில் பலரால் முடிந்தது. சிலசமயங்களில் பெரியவர்கள் யாரேனும் இருந்தால் மஹாபாரதமோ ராமாயணமோ கூறுவார்கள். இவற்றின் மூலம் முன்னோர் பட்ட கஷ்டங்களையும் துயரங்களையும், எங்கள் சொகுசான வாழ்க்கை குறித்தும் ஒப்பிட்டு அறிந்துகொள்ள முடிந்தது.

நேற்று என் மகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. வழக்கம்போல விடுமுறையை பாதி அம்மா பக்க பாட்டி வீட்டிலும் மீதியை அப்பா பக்க பாட்டி வீட்டிலும் கழிக்க கிளம்பினாள். ஆனால் அங்கே அவளுடன் விளையாட ஒருவர் அல்லது இருவர் மட்டுமே உள்ளனர். எங்கள் ஊரில் பக்கத்துவீட்டு சிறுமி, என் மனைவி வீட்டில் என் மனைவியின் அண்ணன் குழந்தைகள் இரண்டுபேர். அங்கேயும் ஓடியாடி விளையாடும் தருணம் வாய்ப்பதில்லை. நினைத்த வீட்டில் சாப்பிட்டு, கிடைக்கும் இடத்தில் நண்பர்களுடன் தூங்கும் இன்பம் முற்றிலும் வேறானது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சில குழந்தைகள் உள்ளன. ஆனால் ஓடியாடி, இருப்பதை பகிர்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் முற்றிலும் இல்லை. இதனால் சுயநலமும் அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுக்காத தன்மையும் வளர்ந்து முற்றிலும் வேறு குழந்தைகளாக உருவாகிறார்கள்.

இவற்றிற்கு நகரத்தில் வாழும் பெரும்பாலான படித்த பெற்றோர்களின் குறுகிய மனஓட்டமே காரணம். குழந்தைகளை எந்த சமூக பொறுப்பும் இல்லாமல், எதைப்பற்றியும் சொல்லிக்கொடுக்காமல் வளர்க்கின்றனர். என் மகள் பள்ளிக்கூடத்தில் நண்பர்களிடம் பேசியதாக கூறும் விஷயங்களே இதற்கு சான்று. ஏதோ சிறிதளவில் வாசிக்கும் பெற்றோர்களால் பரந்த மனப்பான்மையை பெறும் குழந்தைகள் மற்ற குழந்தைகளால் ஏமாளி பட்டம் பெற்று வீட்டில் அழுவதை நான் பார்த்திருக்கிறேன். பள்ளிகளிலும் அறம் பற்றிய, தார்மீகம் பற்றிய வகுப்புகள் இல்லாததால் சரியான வழிகாட்டுதலின்றி குழந்தைகள் தவிக்கின்றன.

இவற்றிலிருந்து குழந்தைகளை, அந்த பிஞ்சு மனங்களை சரியான வாழ்க்கைமுறை நோக்கி செலுத்துவது பெற்றோராகிய நமக்கும், பள்ளிகளுக்கும், இந்த சமூகத்திற்கும் உள்ள முக்கியமான கடமையாகும். இல்லாவிட்டால் மிக மோசமான சுயநலமிக்க ஒரு சமூகத்தையே நம்முடைய குழந்தைகளுக்காக நாம் விட்டுச்செல்கிறோம்.

கருத்துகள் இல்லை:

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...