புதன், 17 ஏப்ரல், 2019

கணநேர எரிச்சல்

எங்கள் கிராமத்தில் நான் மிதிவண்டி கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது ஒன்பது வயது. அப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் மிதிவண்டி இருக்காது. அதனால் வாடகை வண்டிதான். பெரிய வண்டி என்றால் ஒரு மணி நேரத்திற்கு 30 பைசா சிறிய வண்டி என்றால் 50 பைசா. ஊரில் இரண்டே கடைகள்தான் வாடகைக்கு மிதிவண்டி கொடுப்பார்கள். இரண்டு கடைகளிலும் ஒவ்வொரு சிறிய வண்டிதான் வைத்திருந்தார்கள். கற்றுக்கொள்பவர்கள் எப்போதும் சிறிய வண்டியை கடை திறந்தவுடன் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். இந்த சந்தர்ப்பங்களில் இரண்டு வழிகளை பின்பற்றலாம்.ஒன்று, வாடகைக்கு எடுத்தவனிடம் கெஞ்சி கூத்தாடி பேரம் பேசி, ஊரை ஒரு சுற்று அல்லது இரண்டு சுற்று வரலாம், அந்த பையனின் பெற்றோர் பார்க்காமல். இல்லையேல் கடை முன் அமர்ந்து காத்திருக்கலாம். நான் இரண்டாவது வழியை தேர்ந்தேடுத்ததே அதிகம். இதற்கு அதீத பொறுமை தேவை. நாம் ஒரு மணிநேரம் காத்திருந்து, வேறு யாராவது கடைக்காரனின் உறவினர் எடுத்து சென்றால் ஒன்றும் செய்யமுடியாது. மறுபடியும் ஒருமணிநேரம் காத்திருக்கவேண்டியதுதான். இதையெல்லாம் மீறி பொறுமையுடன், அந்த கடையின் முன்னரே விளையாடி மூன்று மணிநேரமெல்லாம் காத்திருந்து வண்டி வாடகைக்கு எடுத்திருக்கிறேன்.

இதை இப்போது ஏன் சொல்கிறேன் என்றால், இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தேன். அகலம் குறைவான தெரு, புதியதாக கோவில் ஒன்று வந்திருப்பதால் இரண்டு பக்கமும் வண்டிகளை நிறுத்தியிருந்தனர். வண்டி மெதுவாக செல்ல பின்னல் ஒருவர் தொடர்ந்து ஒலிப்பானை அழுத்திக்கொண்டேவந்தார். திடீரென ஏதோ தோன்ற நான் வண்டியை நிறுத்திவிட்டு அவரிடம் எரிச்சலுடன் முன்னால் வழி இல்லை என கூறி சத்தம்போட, அவர் கூப்பாடுபோட, ஐந்து நிமிடம் அந்த இடமே மாறிப்போனது. இந்த எரிச்சல் நாள் முழுவதும் கூடவே இருந்து பாடுபடுத்திய பின்னர்தான் சென்றது.

பிறகு இரவு யோசித்தபோது நான் என் வேலையை பார்த்துக்கொண்டு சென்றிருந்தேனென்றல் இவ்வளவு பிரசனையே இல்லை, எரிச்சல் இல்லை. ஒரு சாதாரண மிதிவண்டிக்காக மூன்றுமணிநேரம் காத்திருந்த என் பொறுமை எங்கே, ஏன் இவ்வாறு அடிக்கடி எரிச்சல் வருகிறது. நான் வண்டியிலிருந்து தலையை நீட்டி "இரண்டு நிமிடம்" என்று சொல்லியிருக்கலாம், ஒன்றுமே சொல்லாமல்கூட சென்றிருக்கலாம். அந்த கணநேர எதிர்வினை என்னுடைய முழுநாளையும் வீணாக்கியது.

அந்த மனிதரும் முழுநாளும் என்போலவே இருந்திருப்பார் என்றால் கணநேர எதிர்வினையின் எதிர்மறை பாதிப்பு, குற்றவுணர்ச்சி என என் மனம் சோர்ந்துபோனது. இனிமேல் யாரிடமும் அனாவசியமாக சத்தம்போட்டு பேசுவதில்லை என நினைத்திருக்கிறேன். இதில் முக்கியமென நான் நினைப்பது எதுவென்றால், அந்த கணநேர எரிச்சலை தாண்டினால் போதும், அதற்கே பொறுமையின் அவசியம் அதிகம்.மெதுவாக என்னுடைய பொறுமையை மீட்டெடுக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...