திங்கள், 1 ஏப்ரல், 2019

ஈரோடு விவாத பட்டறை

கற்றலின் இனிமை தகுதியானவர்களிடம் கற்பது...

சிலமுறை சென்னை வெண்முரசு விவாதங்களில் கலந்துகொண்டிருந்தாலும் ஒரே நாளில் தொடர்ந்து  நான்கு அமர்வுகளில் கலந்துகொள்வது இதுவே எனக்கு முதல்முறை. தீவிரம், விவாதங்களில் நகைச்சுவை, சக வாசகர்கள் என அனைத்துமே கடந்த இரண்டு நாட்களை மேலும் இனிமை கொண்டதாக ஆக்கிவிட்டன.

சனிக்கிழமை அதிகாலை ரயில்நிலையத்தில் மலைச்சாமியையும் ராகேஷையும் சந்தித்ததில் தொடங்கியது என் முதல் இலக்கிய சந்திப்பு. எதிரில் வந்த ஆட்டோவில் தத்வமஸி என எழுதியிருக்க அதற்கு கீழே ஆட்டோ யூனியன் பெயரை பார்த்தவுடன் கண்டிப்பாக ஆட்டோ ஓட்டுநர் நல்ல வாசகராக இருப்பார் என உரையாடல் தொடங்கியது. அது, பிற எழுத்தாளர்களிடம் சென்றுகொண்டிருக்க ராஜ்மஹால் வந்ததும் அப்படியே நின்றது. காரணம், முன்கதவு திறந்திருக்கிறதா இல்லையா என்ற அடுத்த விவாதம் தொடங்கியதுதான்.

ராஜகோபாலன் முதல் அமர்வின்போது தம்முடைய உரையை மனம் எப்படி சிந்திக்கிறது, மொழியின் பயன்பாடுகள், "பாதிப்பு" என்ற வார்த்தை எப்படி பாதிப்படைகிறது என சுவாரசியமாக நடத்திச்சென்றார். விவாதத்தின் குறிக்கோள் அறிதலும் பகிர்தலுமே அன்றி வேறில்லை என அவர் சொன்னதை இந்த அமர்வின் ஆப்தவாக்கியமாக உணர்ந்தேன்.

செந்தில் கேள்விகளின் வகைகள், கேள்வி ஏன் எழுப்புகிறோம், என இரண்டாம் அமர்வை நன்றாக தொகுத்து வழங்கினார். இந்த அமர்வில் தெரிந்த விஷயங்களை தேவையான அளவே சொல்லுங்கள் என்பது என் அடுத்த ஆப்தவாக்கியமாக அமைந்தது.

ஜெயமோகன் அவர்களின் உரை மதியத்தில் ஆரம்பித்தது. எடுத்தவுடன் மூன்று சொற்களை விளக்கிய பின் உடனடி தேர்வு என சூடுபிடித்தது. பிறகு விவாதம், விவாதகருத்து, சுபக்ஷம், பரபக்ஷம் என கூரிய கலைச்சொற்களால் ஜெ வகுப்பை முன்னெடுத்து சென்றார். சற்றே கண் சொருக ஆரம்பித்ததும் அடுத்த கேள்வி-பதில் என அனைவரையும் உடனே உச்சகட்ட விழிப்புநிலைக்கு செல்லவைத்தார். விவாதத்தில் வாதம் (argument) செய்ய தொடங்கினால் நாம் எதிரியாகவே மாறிவிடுவோம் என்பது நான் கண்ட மூன்றாவது ஆப்தவாக்கியம்.

நான்காவது அமர்வாக இரு தலைப்புகளில் விவாதம் செய்யவைத்து தவறுகளை உடனடியாக சொல்லி புரிய வைத்தது முதல் மூன்று அமர்வுகளில் கற்றவற்றை தொகுக்க வைத்தது. என்னால் இரண்டுமுறை மட்டுமே பேசமுடிந்தது. அப்போது கூட ஏதாவது சொல்லி ஜெவிடம் திட்டு வாங்கக்கூடாது என்ற பதட்டத்தை உள்ளடக்கியே பேசினேன். கடைசியில் ராஜகோபாலன் என்னுடைய பெயரை சொல்லி இவர் பதட்டப்படாமல் சொல்லவேண்டியதை சொன்னார் என்னும்போது "என்னுடைய கஷ்டம் உமக்கு எங்கே ஐயா தெரிய போகிறது" என மனதில் தோன்றிய எண்ணத்தை தடுக்க முடியவில்லை.

மறுநாள் காலையில் ஐந்தாவது அமர்வில், பிழையான தருக்கம் என்பது என்ன என தொடங்கி, மேலை தத்துவங்களில் எவற்றையெல்லாம் பிழை என வகைப்படுத்துவர் என்பவற்றை கூறி உரையை கொண்டு சென்று, மறுபடியும் தேர்வு வைத்து சரியான பதில்களை கூறியவர்களுக்கு பரிசு கொடுத்தார் ஜெ .

கடைசி அமர்வில், இந்திய ஞானமரபின் தரிசனங்களையும் அவற்றின் மூல ஆசிரியர்களை பற்றியும் அறிமுகம் தந்து, அவற்றில் ஒன்றான நியாய தரிசனத்திற்குள் இட்டுச்சென்றார் ஜெ. நியாய தருக்கம் என்றால் என்ன, அவற்றின் பகுதிகள், ஷோடச ஸ்தானம் என கடைசி அமர்வு நிகழ்ந்தது. இந்த முறை தேர்வில், என்னுடைய அனைத்து பதில்களும் சரியாக இருக்க ஜெ புத்தக கொடுப்பார் என எதிர்பார்த்து நின்றபோது, சரியான பதில்களை பலர் எழுதியிருந்ததால் அவர் மனதில் மட்டுமே இடம் கொடுப்பேன் என கூறி எல்லாரையும் சிரிக்கவைத்தார். எந்த ஒரு தத்துவத்தையும் ஒரு படமாக, சித்திரமாக நினைவில் வைத்துக்கொள்ளுதல் அவற்றை மறக்க முடியாததாக ஆக்கும் என ஜெ கூறியது இந்த அமர்வு மற்றும் மொத்த இரண்டு நாட்களின் ஆப்தவாக்கியமாக மனதில் நின்றது.

ஞாயிறு காலை இளையராஜாவுடனான ஜெவின் விவாதம் மற்றும் அமர்வுகள் முடிந்த பிறகு அனைவருடன் ஜெ பேசியது முதலியவற்றில் முழுமையாக பங்கேற்காததால் அவைற்றை என்னால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை.
கடைசியில், என் மகளுக்காக வாங்கிய வெள்ளி நிலம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி வணங்கி ஜெவிடம் விடை பெற்றேன்.

செவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கு "சிறிது" ஈயப்படும் என்ற கருத்தை திருக்குறளோடு அமைப்பாளர்கள் நிறுத்திவிட்டதால், நல்ல சுவையான உணவை உண்ணும்போது கிடைத்த அனுபவமும் இனிமையாக அமைந்தது. உணவின் சுவை ஜாஜா "காலையில்  பொங்கலை போடாதீர்கள் என்று சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறார்கள்" என்று கூறியதில் பிரத்யக்ஷமாக தெரிந்தது.

மீண்டும் மலைச்சாமி மற்றும் ராகேஷுடன் பேருந்து பிடித்து ஜெவின் அறம் பற்றி பேசி, சென்னைக்கு செல்லும் பேருந்தை விட இருந்தேன். நல்லவேளையாக ராகேஷ் நினைவுலகிற்கு வந்து கிளம்பச்சொன்னார்.
இந்த இரண்டு நாட்களின் இனிமைகளை அசைபோட்டவாறு சென்னை வந்துசேர்ந்தேன்.

கருத்துகள் இல்லை:

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...